உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயல்திட்டங்கள் செய்து வரும் பணிகள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தேவைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கடந்த மாதம் 24ஆம் தேதியன்று நடைபெற்ற ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின்துவக்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதனடிப்படையில் 02.05.2010 அன்று இரவு 7.30 மணியளவில் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஹாஃபிழ் அப்துல் மத்தீன் இக்ராஃ அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
இக்ராஃ குறித்து தம் மன்றத்தால் அறியப்பட வேண்டிய அனைத்து விடயங்கள் குறித்தும், இக்ராஃ செயலர் ஏ.தர்வேஷ் முஹம்மதிடம் விரிவாகக் கேட்டறிந்த அவர், பெறப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில் தாம் அறிக்கை ஒன்றை தமது மன்ற நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப் போவதாகவும், மன்றத்தின் அடுத்த கூட்டத்தில் இதுகுறித்து விவாதித்து முடிவுகள் எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.
இக்ராஃ செயற்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.கே.கலீல், துணைச் செயலர் ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் இச்சந்திப்பின்போது உடனிருந்தனர்.